சொல்லினும் நீளும்…
உங்கள் எழுத்துக்கள் தோன்றும்போதுஎம்மில் படைக்கப்பட்டிருந்தன
இலக்கியங்களும் இலக்கணங்களும்
நீங்கள் நெருப்பைக் கண்டு
அஞ்சிய வேளையில்
நாங்கள் அதில்
சமைத்துக் கொண்டிருந்தோம்
சொல்லினும் நீளும்
சொல்லாதவை அதனினும் நீளும்
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட
எம் வரலாறை மெய்ப்பிக்கும்
தொல்லியல் ஆய்வைத் தொடர விடாது
மறுதலிக்கும் உம்
மானங்கெட்ட மக்களாட்சியின்
வெறும் சக்கைகளில் சாறு பிழியும்
சட்டங்களில் எமக்கு உடன்பாடில்லை
தீமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்
நிலைப்பாட்டின் முறைமையும்
விளங்கவில்லை
ஒவ்வாத காரணியம் சொல்லி
ஒதுங்கவும் முடியவில்லை
அவனை வீழ்த்த இவனுக்கென்றும்
இவனை வீழ்த்த அவனுக்கென்றும்
மாற்றி மாற்றி வாக்களிக்கவே
அகவைக்கு வந்தோம்
புழுத்த புராணப் புரட்டைப்
புறக்கணிக்க மறந்தோம்
தமிழர் ஆண்டை மறந்தோம்
தமிழர் ஆண்ட நிலமிழந்தோம்
தனித்தமிழ்க் குடியரசிழந்தோம்
தமிழரல்ல இந்தியர் என்றே
இளித்தோம் இழிந்தோம்
வந்தாரை வாழ்வித்துத்
தாம் வீழ்ந்து போவதில்
எம்மோடு போட்டியிட
யாரும் இலர்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்ற பின்னும்
வாருங்கள் களவாட
இன்னும் எஞ்சியிருக்கிறது எங்களிடம்
முற்றுப் பெறாத கற்பனைகளும்…
நிறைவேறாத கனவுகளும்…
ச.க.இரமேசு எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக