திங்கள், 14 ஏப்ரல், 2014

சொல்லினும் நீளும்

உங்கள் எழுத்துக்கள் தோன்றும்போது
எம்மில் படைக்கப்பட்டிருந்தன
இலக்கியங்களும் இலக்கணங்களும்

நீங்கள் நெருப்பைக் கண்டு
அஞ்சிய வேளையில்
நாங்கள் அதில்
சமைத்துக் கொண்டிருந்தோம்

சொல்லினும் நீளும்
சொல்லாதவை அதனினும் நீளும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட
எம் வரலாறை மெய்ப்பிக்கும்
தொல்லியல் ஆய்வைத் தொடர விடாது
மறுதலிக்கும் உம்
மானங்கெட்ட மக்களாட்சியின்
வெறும் சக்கைகளில் சாறு பிழியும்
சட்டங்களில் எமக்கு உடன்பாடில்லை

தீமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்
நிலைப்பாட்டின் முறைமையும்
விளங்கவில்லை

ஒவ்வாத காரணியம் சொல்லி
ஒதுங்கவும் முடியவில்லை

அவனை வீழ்த்த இவனுக்கென்றும்
இவனை வீழ்த்த அவனுக்கென்றும்
மாற்றி மாற்றி வாக்களிக்கவே
அகவைக்கு வந்தோம்

புழுத்த புராணப் புரட்டைப்
புறக்கணிக்க மறந்தோம்

தமிழர் ஆண்டை மறந்தோம்
தமிழர் ஆண்ட நிலமிழந்தோம்
தனித்தமிழ்க் குடியரசிழந்தோம்
தமிழரல்ல இந்தியர் என்றே
இளித்தோம் இழிந்தோம்

வந்தாரை வாழ்வித்துத்
தாம் வீழ்ந்து போவதில்
எம்மோடு போட்டியிட
யாரும் இலர்

இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்ற பின்னும்
வாருங்கள் களவாட

இன்னும் எஞ்சியிருக்கிறது எங்களிடம்
முற்றுப் பெறாத கற்பனைகளும்
நிறைவேறாத கனவுகளும்

..இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக