திங்கள், 14 ஏப்ரல், 2014


மகளே!
பனிமலர்
உனக்கான களிப்பு
கரைபுரண்டு கிடக்கிறது
எப்போதும் இருக்கிறது
நீ விரும்பும் விடுதலை
உன் மீதான திணிப்பென்று
ஏதுமில்லை என்னிடம்
சொல்லிக் கொடுங்கள்
என்பவர்களுக்குத் தெரியாது
உன்னிடமிருந்து
நான் கற்றுக் கொள்வது
உனதான ஒவ்வொரு செயலிலும்
உயிர்த்துக் கொண்டேயிருக்கும்
என் உணர்வுகள்
என்னைப்போல நடித்து
என் இயல்பின் குறை களைகிறாய்
உனக்கெனக் கொடுப்பதை
பொம்மைகளுக்கும்
கொடுத்துவிட்டே உண்கிறாய்
அவைகளைக் குளிப்பாட்டிய பிறகே
நீ குளிக்கிறாய்
அவைகளுக்காகத்
தாலாட்டுப்பாடியே நீ உறங்குகிறாய்
பொறியாளருக்கு வீடுகட்டித் தருகிறாய்
மருத்துவருக்கு
வலிக்காமல் ஊசி போடுகிறாய்
தாய்க்குச் சமைத்துத் தருகிறாய்
எனக்குத் தேநீர் தருகிறாய்
தாத்தாவிற்குச் செல்பேசியில்
பேசக் கற்றுத் தருகிறாய்
இயல்பின் முரணை
உடைத்து நொறுக்கி
என் கண்முன் நிறுத்துகிறாய்
நான் கண்டிருக்க முடியாத
என் சிறுபிள்ளை அம்மாவை

..இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக