திங்கள், 14 ஏப்ரல், 2014


அப்பா... அப்பப்பா...
கலைப்பித்தன்.கா.கணேசன்
அரசுப்பணி உதறிய உங்கள் தன்மானம்
எனக்காய்ப் பொங்கிய அரிசிக்காக
அடகு வைக்கப்பட்டது

என் வாழ்வியலுக்கு நிறம் கொடுக்க
கருப்பாகிப் போனது உமது கலைப்பயணம்

எனது அழுகை நிறுத்த மட்டுமே
கசிந்தது உமது மெல்லிசை

எனக்கு நகைப்பூட்டும் பொருட்டே
வெளிப்பட்டன உம் நல்லோவியங்கள்

என்னைக் களிப்பூட்டவே
காணக்கிடைத்தது
உமது நாடகக்கலை

விட்டெறியும் வெற்றிடங்கள் நிறைந்த
எனது நாளேடுகள் எடுத்தே
நிறைந்து வழிந்தன உமது எழுத்துக்கள்

எனது கலைந்த நூல்களுக்கிடையில்
என்னை விடவும் நிறைந்து பயன்படுத்தும்
உங்கள் நூல்கள் கலைக்கூடம் போல்

உம் கையாளும் திறன்
கற்றுத் தருகிறது எனக்கு
ஒவ்வொரு பொருளின்
பயன்பாட்டையும்

பேசிப்பேசிக் கொல்லும் உலகில்
உமது பேசாமை
என்னுள் உணர்த்தியவையும்
ஒரு நலிந்த கலைஞனாய் நீர்
எமக்குள் நடவு செய்தவையும்
நிறைய நிறைய

எங்கெங்கோ வேலைபார்த்தாலும்
எப்போதும் பெருமையாய்ச்
சொல்வீர் என்னை

ஒவ்வொரு தொழிலும்
அடிபட்டுத் திரும்பினாலும்
எப்போதும்
வலிகளை உணரச்செய்ததில்லை

அரசன் வீட்டுக் கன்றாகவே
ஆடித் திரிவேன்

உணர்ந்திட முடியா
உமது இன்னல்களையெல்லாம்

ஒருசேர உணர்த்துகிறது எனக்கு
உங்கள் தொலைமை
நானுமொரு தந்தையாகி
என் மகளைப் பிரிந்து வந்த பிறகு...

ச.க.இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக