திங்கள், 14 டிசம்பர், 2015

விடியலை நோக்கி ...

தொடர் வண்டியைக் காட்டிலும்
பிணங்களையே மிகையாகச் சுமக்கப்
பழகிக் கொண்டு விட்டன தண்டவாளங்கள்

இறந்த பின்னும்
கொன்று கொண்டேயிருத்தலும்
இங்கே முறைமையாகிவிட்டன

இன்னும் செருப்பைக் கையிலெடுத்தே
பயணிக்கிறார்கள் எம் பள்ளிச் சிறார்கள்

எரிக்கப்படுகிறது
சேரிக்குள் வர முயலும்
கடவுளின் தேரும்
கடவுளின் பிள்ளைகளின் ஊரும்

மொழியை முடமாக்கி
உட்பிரிவின் உட்புகுந்து
முதுகெலும்பு முறிக்கப் படுவது
உணரமுடிகிறது நன்றாய்

வீழும் உடல்கள் குறைவதில்லை
விதைத்த விதைகளும் இங்கே அப்படியே
விடியலை நோக்கி விரையும் நம் பயணம்
எழுச்சியோடு மீட்டெடுப்போம்
நாளைய மலர்ச்சி நமக்கானதே

----------------------- எழில் (ச.க.இரமேசு)

[பாக்கூடல்(கவிதை சங்கமம்) குழுமத்தில் நிகழ்ந்த போட்டியில்
இரண்டாமிடம் பெற்ற பா]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக